திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.16 திருக்கொள்ளிக்காடு பண் - காந்தாரபஞ்சமம் |
நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
|
1 |
ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
கூற்றனை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
|
2 |
அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
|
3 |
பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையில் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
|
4 |
வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
|
5 |
பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
|
6 |
இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
|
7 |
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
|
8 |
தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.
|
9 |
நாடிநின் றரிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
|
10 |
நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |